சர்வதேச பின்னலாடை ஜவுளி வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு 2.5 சதவீதம் மட்டுமே; அவற்றில், 1.5 சதவீதம் வர்த்தகம், திருப்பூரை தலைமையிடமாக கொண்டு நடக்கிறது. எதிர்காலத்தில், உலக வர்த்தகத்தில் திருப்பூர் நிறுவனங்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. அதற்குரிய சாதகமான சூழல் நிலவுவதால், அத்தகைய இலக்கை எளிதாக எட்ட முடியும். திருப்பூரின் பின்னலாடை வர்த்தகமும், வேலைவாய்ப்பும் தற்போதுள்ள நிலையில் இருந்து நான்கு மடங்கு உயரும். வரும் 2017க்குள் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் உயர வாய்ப்புள்ளது. இதற்கு அச்சாணியாக, அனைத்து தொழில் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு, தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்கை வரும் 28ல் நடத்துகின்றன. தொழில் துறையினர் மட்டுமின்றி, அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதில் எடுக்கப்படும் முயற்சிகள், உலகை "வளைத்து'க் காட்ட உதவும்!
திருப்பூரின் வளர்ச்சி: சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாநகராட்சியாகவும், மாவட்ட தலைநகராகவும் தரம் உயர காரணம், பின்னலாடை வர்த்தகம். கோல்கட்டாவில் இருந்து திருப்பூர் வந்த பனியன் தொழிலுக்கு, 1984ல் ஏற்றுமதி வர்த்தக வாய்ப்பு கிட்டியது. 1985ல் 18 கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம், 2012ல் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், தொழில் துறையினரின் அயராத உழைப்பு!
"வந்தாரை வாழ வைக்கும்': தொழில் வளம் பெருகியதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. "வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்' என போற்றும் அளவுக்கு, வெளிமாநிலத்தவரும் வேலைவாய்ப்பு பெற்றனர். நேர்த்தியான சாயமிடல், உலகப்புகழ் பெற்ற பிரின்டிங் தொழில்நுட்பம் காரணமாக, பனியன் தொழில் ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ச்சி பெற்றது. தவறான பொருளாதார கொள்கையால், பஞ்சு - நூல் ஏற்றுமதி காரணமாக, 2009ல், ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும் தள்ளாடியது. வரலாறு காணாத விலை உயர்வால், உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்றுமதி மந்தமாகியது. அடுத்ததாக, சாயத்தொழில் பிரச்னையும் சோதனையை ஏற்படுத்தியது.
சாதகமான சூழல்: தமிழக அரசு காட்டிய வழிகாட்டுதல்படி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னை குறைந்து, 350க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிய அப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தும் உதவிக்கரம் நீண்டுள்ளது. பனியன் தொழிலில் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில், சாதகமான காற்று வீசத்துவங்கியுள்ளதால், பனியன் தொழில் துறையினர் புத்துணர்வு பெற்றுள்ளனர்.
மறுமலர்ச்சி கருத்தரங்கு: தொழில் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில், அனைத்து தொழில் துறையினர் சார்பாக, தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் வேலாயுதசாமி மண்டபத்தில், "வெற்றிப்பாதையில் திருப்பூர் 2012' என்ற கருத்தரங்கு, வரும் 28ல் நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு அரசின், தொழில் துறை முதன்மை செயலர் சுந்தரதேவன், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் சந்தானம், நிர்வாக சீர்திருத்த முதன்மை செயலர் (பயிற்சி) இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், பல்துறை வல்லுனர்களின் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
10 சதவீதம் உயரும்! "நிப்ட்-டீ' கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: சர்வதேச பின்னலாடை ஜவுளி வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு 2.5 சதவீதம் மட்டுமே உள்ளது. சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுமதி சந்தைகளில், இந்தியாவுக்கு கடும் போட்டியை உருவாக்கி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் உதவியால் மட்டுமின்றி, தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் மூலமாகவும், தொழில் பிரச்னைகளை கட்டுக்குள் வைக்க முடியும். உலக அளவிலான வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு 2.5 சதவீதமாக இருந்தாலும், அவற்றில் 1.5 சதவீதம் வர்த்தகம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு நடக்கிறது. ஏற்றுமதி தொழில் நகரமாக உயர்ந்துள்ளதால், அனைத்து உலக நாடுகளிலும் திருப்பூர் பிரசித்தி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டு வளர்ச்சியால், தொலைநோக்கு பார்வையுடன் ஏற்றுமதி தொழில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலக வர்த்தகத்தில் திருப்பூர் நிறுவனங்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. தற்போது சாதகமான சூழல் நிலவுவதால், எளிதாக அத்தகைய இலக்கை எட்டவும் முடியும். திருப்பூரின் பின்னலாடை வர்த்தகமும், வேலை வாய்ப்பும் தற்போதுள்ள நிலையில் இருந்து நான்கு மடங்கு உயரும். அதன்படி, வரும் 2017க்குள் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் உயர வாய்ப்புள்ளது. உற்பத்தி அளவு உயரும்போது, பருத்தி பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஏற்றுமதி குறைந்து, மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளாக ஏற்றுமதி நடப்பது அதிகரிக்கும். நாட்டின் அன்னிய செலாவணி மதிப்பும் உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.
எதற்காக, கருத்தரங்கு? பனியன் தொழிலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வரும் 28ல் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அதில், வேஸ்ட்டை குறைக்கும் வழிகள், உற்பத்தி திறனை மேம்படுத்துதல், வங்கிகளின் திட்டங்கள், புதிய முயற்சிகள் மற்றும் கூட்டு முயற்சியின் பலன் ஆகிய தலைப்புகளில் தொழில் துறை வல்லுனர்களின் உரை இடம் பெறும்.பனியன் வேஸ்ட்டை குறைக்கும் வழிகள் என்ற தலைப்பில், பனியன் தயாரிப்பில் நூல் தயாரிப்பு, "நிட்டிங்', "டையிங்', "காம்பாக்டிங்' போன்ற பல்வேறு பிரிவுகளில் எவ்வாறு விரையத்தை தடுக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, "க்ரே பேப்ரிக்' எனப்படும் துணி ரோல் சாயமிட அனுப்பும்போது, ரோலின் இரண்டு பக்கமும் மஞ்சள் மார்க்கர் பேனாவால், துணி குறித்த விவரங்கள் எழுதும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால், துணியின் இரண்டு முனைகளிலும் சுமார் 25 சென்டிமீட்டர் அளவுக்கு விரையமாகிறது. இதற்கு பதிலாக, "ஸ்டிக்கரிங் மெஷின்' எனப்படும், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு இயந்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம், துணி ரோலின் இரண்டு முனைகளிலும் ஸ்டிக்கரில் துணி குறித்த விவரங்களை அச்சடித்து ஒட்டுவதன் மூலம், ஒவ்வொரு முனையிலும் 15 சென்டி மீட்டர் துணி மிச்சப்படுத்தலாம்.
உதாரணமாக, 25 கிலோ ரோலில் மிச்சமாகும் துணி எடை 55 கிராம். தினமும் சராசரியாக 10 டன் துணி உபயோகப்படுத்தும், ஒரு ஏற்றுமதி நிறுவனத்துக்கு 400 துணி ரோல் தேவைப்படும். இந்த 400 ரோல்களில் 55 கிராம் மிச்சப்படுத்தினால், தினமும் 22 கிலோ துணி மிச்சமாகும். இதன் மதிப்பு 7,700 ரூபாய். மாதம் 2.31 லட்சம் ரூபாய்; ஆண்டுக்கு 27.72 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது. இந்த சிறு மாறுதலே, மிகப்பெரிய தொகையை மிச்சப்படுத்தி தருகிறது. இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும் , விரையத்தை தடுக்கவும், திறனை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது. இவ்விவரங்களை சரியானபடி, தொழில் முனைவோர் கவனத்துக்கு கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே, சர்வதேச தொழில் போட்டிகளை சரியானபடி எதிர்கொள்ள ஏதுவாகும். அதற்காகவே, கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
பங்கேற்கும் அமைப்புகள்! தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்கில், திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளும் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.
* தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா)
* திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ)
* பனியன் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா)
* திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம் (டெக்மா)
* திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா)
* தென்னிந்திய இறக்குமதி மெஷின் நிட்டிங் உரிமையாளர்கள் (சிம்கா)
* திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்
* திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்)
* திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்கம்
* "நிட் காம்பாக்டிங்' உரிமையாளர்கள் சங்கம்
* திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன்
* திருப்பூர் தொழில் பாதுகாப்பு கமிட்டி
* திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரின்டிங் அசோசியேஷன் (டெக்பா)
* திருப்பூர் சாயம், கெமிக்கல் வியாபாரிகள் சங்கம்
* புதிய திருப்பூர் சிறு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்
* திருப்பூர் ஏற்றுமதியாளர் பின்னலாடை தொழில் வளாகம் (டெக்கிக்) மேலும், பல்வேறு தொழில் அமைப்புகள் கருத்தரங்கில் பங்கேற்கின்றன.
தொழில் நிலை என்ன? திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்கா 40 சதவீதம்; ஐரோப்பிய நாடுகள் 55 சதவீதம்; பிற நாடுகள் ஐந்து சதவீதம் பங்கு வகிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளுடனான, எப்.டி.ஏ., (பிரீ டிரேடு அக்ரிமென்ட்) ஒப்பந்தம் நிறைவேறும்போது, அந்நாட்டு வர்த்தகர்களுக்கு இறக்குமதி வரி சலுகை கிடைக்கும்; அங்கிருந்து அதிகப்படியான ஆர்டர் திருப்பூருக்கு வரும் வாய்ப்புள்ளது. மேலும், 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் மறுசீரமைப்பு செய்ய, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதும், பின்னலாடை தொழில் துறையினருக்கு பேருதவியாக இருக்கும். பஞ்சு, நூல் விலையும் நிலையான இடத்தில் உள்ளன. ஆர்டர் விசாரணையும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடியுள்ளது. இந்நிலையில், சீனாவில் ஏற்பட்ட தொழிலாளர் கூலி உயர்வு பிரச்னையால், அந்நாட்டு நிறுவனங்களுக்கு எட்டு சதவீத ஆர்டர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் கணிசமான ஆர்டர்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதனால், திருப்பூர் பனியன் தொழில், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது, தொழில் முனைவோர் இடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"மிஸ்' பண்ணாதீங்க...: பனியன் தொழில் என்பது பருத்தி பஞ்சில் துவங்கி, ஆடையாகி, நுகர்வோருக்கு செல்வது வரை பல்வேறு படி நிலைகளை கொண்டது. ஒன்றில் இருந்து ஒன்று என சங்கிலி தொடர்போல் பின்னி, பிணைந்த, பல உப தொழில்களை உள்ளடக்கியது. இத்தொழில் புத்துணர்ச்சியுடன் சர்வதேச அளவிலான சாதனைக்கு வழிகாட்டும் வகையில் கருத்தரங்கு அமைய உள்ளது. இதில், தொழில் முனைவோர் மட்டுமன்றி, தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், "ஜாப் ஒர்க்' நிறுவன உரிமையாளர்கள் என தொழிலில் ஒவ்வொரு அங்கமாக இருக்கும் அனைத்து தரப்பினரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். ஆலோசனைகளை பெறுவது மட்டுமன்றி, தங்களது கருத்துகளையும் பதிவு செய்து, தொழில் வளர்ச்சிக்கு உரமிட வேண்டும். பின்னலாடை தொழிலை நம்பி, மளிகை, பேக்கரி, வாகன போக்கு வரத்து, அரிசி வியாபாரம், ஓட்டல்கள் என எண்ணற்ற தொழில்கள் உள்ளன. அனைத்து தொழில் துறையினரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திருப்பூர் மக்கள் படும் கஷ்ட்டங்கள் இங்கே பேசுபவர்களுக்கு தெரியாது , ஒரு நாளுக்கு 12 முதல் ௨௦ மணி நேரம் கால் நோக வேலை செய்ய வேண்டும் . அப்படியும் அவர்களுக்கு குறைந்த சம்பளமே லாபம் வந்தால் அது முதலாளி களுக்கு மட்டும் தான் போய் சேரும். தங்களின் சுய லாபத்திற்காக அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டும் கும்பல் இருக்கும் வரை இந்தியா வால் எந்த துறை இலும் முன்னேற முடியாது
திருப்பூர் சாயப்பட்டறை அதிபர்கள் தங்கள் பாக்கெட்டை நிரப்பினால் போதும் ..நொய்யல் ஆறும் அதை சுற்றி உள்ள மக்களை பற்றியும் யார் கவலை பட்டார்கள் ...அந்நிய நாட்டில் எவோனோ அணியும் கலர் சட்டைக்கு நம் நிலமும் நீரும் மாசுபடுவதைதான் முனேற்றமா...இப்பொழுதெல்லாம் நிறைய சயபடரைகள் பவானியை நோக்கி இடம் மாறிவிட்டனாறாம் ....பவானி விவசாயிகள் பாவம்...
திரு வில்லுபுரம் ஜீவிதன் அவர்களே எங்களுக்கு ஊருக்கு புதுசாக பெயர் சூட்டதீர்கள், எங்கள் மன தைரியத்தை நாங்கள் என்றென்றும் விட்டதில்லை. எங்கள் ஊர் பலரை வாழ வைதிருக்கிறேதே தவிர , சாகடிததில்லை.நங்கள் இன்றும் என்றும் எங்கள் உழைப்பை கைவிட்டதில்லை. பீனிக்ஸ் பறவை என்று ஒன்று இருந்தால் அது எங்கள் ஊரைபர்த்து பெருமைப்படும்.
தயவு செய்து உங்கள் கருத்தை வாபஸ் பெறுங்கள்....
சென்ற ஆட்சியில் தயாநிதி பெறுப்பு ஏற்ற பிறகுதான் இந்த பட்ட பெயர் கிடைத்தது. தற்போது ( July,2012) நிலவரைப்படி மேற்கு வங்காளம் தான் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளது, அதாவது 16492 இறப்புக்கள் தமிழ்நாடு 15963 இறப்புகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறது. தற்கொலை நகரம் என்பதை தப்பாக எடுத்துகொள்ள வேண்டாம். கடன் சுமையால், கவரிமான் ஜாதியாக இருப்பதால் இந்த பெயர் அப்போது கிடைத்தது. இந்த ஆட்சியில் நிலைமை சீரடைந்து வருகிறது என்று நினைக்கின்றேன். ...
24 மணி நேரமும் உழைத்து, தங்களை தாங்களே கசக்கி பிழிந்து, ஜாப் வோர்கேர்ஸ் நிறுவனங்கள், டையிங், பிரிண்டிங், பேப்ரிகேஷன் நிறுவனங்கள் ஆகியவற்றையும் கசக்கி பிழிந்து நீங்கள் கண்டதென்ன ??? இருந்தாலும் வெளிநாட்டை நம்பாமல் இந்திய டொமெஸ்டிக் மார்கெட்டை நம்பிய நம் திருப்பூர் லக்ஷி நகர் மக்கள் நல்லாத்தான் இருக்கிறார்கள்.
பாழடிக்காமல் இருக்க சாயப்பட்டறைகள் மூலம் வெளியேறும் சாயக்கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலைகள் மூலம் சுத்தம் செய்து அந்நீரை மறுபடியும் சுழற்சி முறையில் உபயோகப்படுத்த முடியும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய்கள் மூலம் எடுத்து சென்று கடலில் கலக்க செய்யவும் திட்டம் உள்ளது தமிழக அரசு கையில். அதற்கு ஒரு அறுநூறு கோடி செலவாகும். தமிழக அரசு முனைப்புடன் செயல் பட்டால் வெற்றி பெறலாம்....
திருப்பூர் காலியானதற்கு முதல் காரணம் தயாநிதிமாறன் தான். எப்போ அந்த மனுஷன் ஜவுளித்துரைக்கு எஜமானன் ஆனானோ, அன்னிக்கே ஜவுளித்துறைக்கு சனி பிடித்தது. தான் சம்பாதிக்க பஞ்சு, நூலை (RAW Materials) தடை இல்லா ஏற்றுமதிக்கு உதவினார். பவாரும் இதற்கு உடந்தை. "SALE OF RAW MATERIALS IS SELLING ONES OWN BLOOD" - ன்னு பொருளாதாரம் சொல்லுது. அப்புறம் இந்த கழிவு நீர் பிரச்சனை. சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு நீருக்கு எந்தவித தீர்வும் காணாமல் காலத்தை கடத்தினார். இந்த இரண்டு பிரச்சனைகள் தான் திருப்பூரை அழிவின் முனைக்கே கொண்டு சென்றது. நல்ல வேலை, குடும்ப பிரச்சனையில் தயாநிதி காலியானார் மக்கள் கோவத்தில் திமுக அவுட் ஆனது. மெல்ல மெல்ல இந்த தமிழக அரசு திருப்பூர் தொழிலின் மேல் கவனம் செலுத்தி தற்போது மூன்றில் ஒரு பகுதி சாயப்பட்டறைகள் இயங்கும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மீதி உள்ள சிறு பெரு சாயப்பட்டறைகளும் இயங்க தொடங்கினால் நிலைமை சீராகும். இருந்தாலும் நூல் விலை ஏற்றம் என்பது ஹைட்ரஜன் பலூன் மாதிரி உச்சத்தில் உள்ளது. 110 ருபாய் விற்ற நூல் தற்போது 200 ருபாய். 42 ரூபாய் இருந்த ஒரு டாலர் இன்று 56 ரூபாய். எனவே இந்த இரண்டு மேற்கூறிய காரணங்கள் பனியன் பொருட்களுக்கு விலையை ஏற்றி நம்மை முன்னேற விடாமல் செய்கின்றன. சீனாவில் 2003 இல் ஒரு டாலர் 8 .64 யுவான் இருந்தது இன்று 6 .25 யுவான். பனியன் என்றால் இந்தியாவில் திருப்பூர் மட்டுமே. ஆனால் சீனா அப்படி இல்லை. தென் சீனா முதல் வட கிழக்கு ரஷிய எல்லை வரை ஒவ்வொரு சிற்றூர்களிலும் நூல் மில்கள், நூலை துணியாக்கும் நிட்டிங் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், பிரிண்டிங் & கார்மெண்ட்ஸ் தொழிற்ச்சாலைகள் உள்ளன. நாமோ பருத்தியை மட்டும் நம்பி உள்ளோம். சீனர்களோ பருத்தி, பாலிஸ்டர், மற்றும் பல பல BLED துணி வகைகளை தயாரித்து நிறைய ஆப்ஷன்ஸ் கொடுக்கிறார்கள். எனவே நாம் நம்மை போட்டியில் எங்கே உள்ளோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உலக மார்கெட்டில் குறைந்தது 23 % வைத்திருக்கும் சீனாவை, இந்தியாவை போல அமெரிக்க ஐரோப்பிய மார்க்கெட்டுகளை மட்டும் நம்பி இருக்காமல், தென் அமெரிக்க, ஆப்ரிக்க, மற்ற ஆசிய நாடுகளிலும் வியாபாரம் செய்யும் சீனர்களை தோற்கடித்து 10 % உலக வர்த்தகத்தை பெறுவோம் என்பது குதிரை கொம்பு தான். இது திருப்பூர் பனியன் சங்கங்களின் சேல்ஸ் டாக். இந்த சங்கங்களில் உள்ள தலைவர்கள் யாவரும் பெரிய முதலைகளுக்கு பாடுபடுகிரார்களே தவிர சிறு பனியன் தயாரிப்பாளர்களை நசுக்கி கொழுக்கிறார்கள் என்பதும் உண்மை என்று திருப்பூர் நண்பர்கள் &39ஒ&39 போடுவார்கள். உண்மை அதுதானே.
திரு.பாண்டியன் அவர்களுடைய கருத்துக்கள் நியாயமானவை, நான் அவற்றை முழுமையாக ஏற்கிறேன்.. ஈரோடு, பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நிறைய சாயப்பட்டறைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன், பட்டறை உரிமையாளர்கள் முதலை இழந்து நிற்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் தீர்மானமான முடிவெடுக்காமல் இருந்தால், பெரிய பிரச்சினையாகவே இது முடியும் - சிவா, தெற்கு சூடான், ஆஃப்ரிக்கா (ஜிமெயில்டாட்காமில் nirmalshiva1968)...
இது மட்டும் இல்லை. கடந்த ஓராண்டு அதிமுக ஆட்சியில் சுமார் 45,000 கோடிக்கு தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உபயம் நேற்று நடந்த மத்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் விரிவாக தரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 50,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தயாராக உள்ளது. தமிழக முதல்வரின் 2025 திட்டம் படிப்படியாக வளர்ந்து வருகிறது. கடுமையான பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும் போன ஆண்டு தமிழகம் 9.5% வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த கால கட்டத்தில் ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சி 6% மட்டுமே. குஜராத் 10 %. பீகார் 12%. உடனே எல்லாரும் நிதிஷ் குமார் பெரிய முதல்வர் என்று கூறவேண்டாம். காரணம் ஒன்னும் இல்லாத இடத்தில் சிறிது வளர்ச்சி இருந்தால் அதுவே பெரிய அளவாக தெரியும். அதாவது பணமே இல்லாத ஒரு ஏழைக்கு 12 ரூபாய் கிடைத்தால் பெரியதாக தோன்றும். அதுவே 100 ரூபாய் உள்ள ஒருவரிடம் 10 ரூபாயை சேர்த்தால் அது 110 ஆக இருக்கும். அதாவது முந்தைய 100 ரூபாயையும் காக்க வேண்டும். மேலும் 10 ரூபாயையும் சேர்க்கவேண்டும். பார்த்தால் பெரிய வித்தியாசம் இல்லாதது போல் இருக்கும். எனவே நிதிஷ் குமார் தன்னை பெரிய முதல்வராக நினைத்து நாட்டில் உலவ கூடாது. போதாத குறைக்கு சிறப்பு நிதி வேறு. ஊழல் செய்தது போக இதை நம்ம ஸ்பெக்ட்ரம் ராசா கூட செய்யமுடியும். பல ஏச்சு பேச்சுகளை தாங்கி கொண்டு தமிழக முதல்வர் கடந்த ஓராண்டுகளில் விதைத்த விதை நல்ல பலனை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.